கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- நேற்று காலை கெந்திங் மலையிலிருந்து கீழே இறங்கும்போது, சுற்றுலா பேருந்து கவிழ்ந்து இரு சீன நாட்டுப் பிரஜைகளின் உயிரைப் பலி கொண்ட விபத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பயண நிறுவனத்தின் உரிமத்தை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு MOTAC தற்காலிகமாக ரத்து செய்யவிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து தற்போது முழு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இவ்விவகாரத்தில் அச்சுற்றுலா நிறுவனம் உட்படுத்தப்பட்டிருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று MOTAC அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சியாங் தெரிவித்தார்.
மலேசியாவுக்கான சீன தூதர் ஒயாங் யுஜிங்ங்குடன் இணைந்து இவ்விபத்தில் காயமடைந்தவரைகளை கோலாலம்பூர் பொதுமருத்துவமனையில் சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
வரும் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து அமைச்சுடன் MOTAC மேற்கொள்ளும் ஒரு சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் நாட்டிலுள்ள சுற்றுலா போக்குவரத்து பாதுகாப்பு பிரச்சனை பற்றி விவாதிக்கப்படும் என்றும் தியோங் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)