அரசியல்

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்; நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை அம்னோ வாக்காளர்கள் ஆதரிப்பர்

30/06/2024 07:37 PM

நிபோங் திபால், 30 ஜூன் (பெர்னாமா) -- வரும் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஜொஹாரி அரிப்பினுக்கே அம்னோ உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கைக் கூட்டணி நம்பிக்கைக் கொண்டுள்ளது.

ஒரு வாரத்திற்கும் மேலாக, சுங்கை பாக்காப் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது  கிடைத்த நேர்மறையான ஆதரவின் அடிப்படையில் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் ஆதரவு ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பக்கம் திரும்பும் என்று சுங்கை பாக்காப் இடைத்தேர்தலின் நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் அப்துல் ஹமிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

"மக்களிடமிருந்து கிடைத்து வரும் நேர்மறையான ஆதரவைத் தொடர்ந்து ஜூலை 6-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும் எஞ்சியிருக்கும் நாட்களில் நாங்கள் தொடர்ந்து அங்கு சேவையாற்றுவோம். குறிப்பாக பகலில் பிரச்சார உரையாற்றவும் அதைத் தொடர்ந்து தேர்தல் கேந்திரத்தை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார் அவர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருக்கும் நிலையில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை வெற்றி பெற வைக்கும் பணியில் தேர்தல் கேந்திரம் தொடர்ந்து பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தும் என்று நம்பிக்கைக் கூட்டணியின் பினாங்கு மாநில தலைமை மன்றத் துணைத் தலைவருமாகிய முஹமட் தெரிவித்தார். 

இதனிடையே, கடந்த தேர்தலைப் போன்று சுங்கை பாக்காப் இடைத்தேர்தலிலும் அம்னோ வாக்காளார்கள் பெரிக்காத்தன் நேஷனலுக்கே ஆதவளித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று அதன் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் அண்மையில் கூறியிருந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)