கோத்தா பாரு, 19 ஜூன் (பெர்னாமா) -- நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இன்று முதல் காலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி, நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர், முஹமட் அஸிசி அபு நாயிம்-இடம் இருந்து மாநில அரசியலமைப்பு சட்டம், பிரிவு 31A, உட்பிரிவு 3-ரின் கீழ் எழுத்துப்பூர்வ அறிவிக்கையை மாநில சட்டமன்றம் பெற்ற பிறகு, இந்த முடிவு செய்யப்பட்டதாக கிளந்தான் சட்டமன்றத் தலைவர், டத்தோ முஹமட் அமார் நிக் அப்துல்லா தெரிவித்தார்.
அதோடு, கடந்த ஜூன் 12-ஆம் தேதி, பெர்சத்து கட்சியும், முஹமட் அஸிசி தமது கட்சியின் உறுப்பினர் அந்தஸ்தை இழந்துள்ளதாக அறிவித்திருப்பதால், அந்த தொகுதி காலியாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று, கோத்தா டாருல்நாயிம் வளாகத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் அந்த தகவல்களை வெளியிட்டார்.
தேர்தல் ஆணையத்திற்கு காலியாகியிருக்கும் அறிவிக்கை கிடைத்தவுடன், மாநில அரசியலமைப்பு சட்டம், பிரிவு 31A, உட்பிரிவு 4-இன் கீழ், 60 நாள்களுக்குள் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் முஹமட் அமார் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)